5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வடகிழக்கு மாநிலத்தை புரட்டி போட்ட ரீமல் புயல்.. 39 பேர் உயிரிழந்த சோகம்!

Remal Cyclone: ரீமல் புயலின் தாக்கத்தால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து, வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மேலும், கொல்கத்தா, மிசோரம், அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அனைத்து பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நீர் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலத்தை புரட்டி போட்ட ரீமல் புயல்.. 39 பேர் உயிரிழந்த சோகம்!
ரீமல் புயல்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 May 2024 07:57 AM

ரீமல் புயல்: மே மாதம் கடும் கோடைகாலம் என்றாலும் இந்த முறை மழைகாலமாகவே இருக்கிறது. தென்மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இதற்கு ரிமல் புயல் என பெயரிடப்பட்டது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மே 26 ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது வடக்கு திசையில் நகர்ந்து, 27ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 135 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசியது.

Also Read: பிரமாண்ட கப்பலில் நாளை தொடங்குகிறது திருமண நிகழ்ச்சிகள்.. பிரபலங்கள் பங்கேற்பு..!

39 பேர் உயிரிழப்பு:

இந்த புயலின் தாக்கத்தால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து, வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மேலும், கொல்கத்தா, மிசோரம், அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அனைத்து பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நீர் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக மிசோரத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த  நிலையில் ரீமல் புயலால் சுமார் 39 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மிசோரமில் 27 பேரும், அசாமில் 2 பேரும், நாகாலாந்தில் 4 பேரும், மேற்கு வங்கத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, ரீமல் புயலால் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மிசோரம் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேகாலயாவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அசாமில் 17 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கிடையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகளை விரைவில் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். அசாமின் துப்ரி, தெற்கு சல்மாரா, பஜாலி, பார்பெட்டா மற்றும் நல்பாரி ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிராங், கோல்பாரா, பக்சா, தமுல்பூர், திமா ஹசாவ், கச்சார், ஹைலகண்டி மற்றும் கரீம்கஞ்ச் ஆகிய இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு மே 29 ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்திய எண்களுடன் சர்வதேச ஏமாற்று அழைப்புகள் வருகிறதா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

 

Latest News